சென்னை: திமுகவுக்கு எதிராக அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. “உருட்டுக்களும் திருட்டுகளும்” என்ற பெயரில் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஏற்கனவே மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை வந்த அவர் புதிய பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டையில் ஆலங்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தமிழகத்தில் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக குற்றம் சாட்டில் பேசினார். இன்று காலை புதுக்கோட்டையில் உருட்டுக்களும் திருட்டுகளும் என்ற பெயரில் திமுகவுக்கு எதிராக புதிய பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி நேற்று வரை 46 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து உள்ளேன்.
பயணத்தின் போது அவர்களிடத்தில் நான் கண்ட மகிழ்ச்சி மற்றும் ஆரவாரமும் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமைதான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்ததாக கூறி உள்ளார். பிரதமரின் தமிழக பயணம் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என்றும், அவரை சந்தித்து பேசும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
நாங்கள் அமித்ஷாவை சந்தித்ததில் என்ன தவறு கண்டார்கள்? அப்படி என்றால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் யார் வீட்டின் கதவை தட்டினார்கள்? மக்களின் பிரச்சினைகளை தெரியாத அரசாங்கமாக திமுக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது.
நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது அரசுக்கு அழகல்ல. அதனால்தான் “உருட்டுக்களும் திருட்டுகளும்” என்ற பிரச்சாரம் மூலம் திமுக செயல் படுத்தாத அறிவிப்புகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறோம். அதிமுக கூட்டணி குறித்து எதிராக பேசுபவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.