நாடு முழுவதும் இயங்கும் இண்டிகோ விமானங்களுக்கு சமீபகாலமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை காலை டெல்லியிலிருந்து லடாக் மாநிலத்தின் லேவுக்குப் புறப்பட்ட 6E 2006 என்ற இண்டிகோ விமானம், நடுவானில் பயணித்தபோது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதால், விமானி அவசரமாக அதை மீண்டும் டெல்லி விமான நிலையத்துக்கே திருப்பி எடுத்து வந்தார். விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இண்டிகோ நிறுவனம், “பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் விமானி அவசரத் தீர்மானம் எடுத்துள்ளார். விமானம் பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு மட்டுமே மீண்டும் சேவைக்கு அனுப்பப்படும். இதற்கிடையில் பயணிகளுக்கான மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவும், புவனேஸ்வர் கொல்கத்தா சேவையில் இயக்கவிருந்த 6E 6101 விமானம், புறப்படவிருக்கும் நேரத்தில் விமானத்தில் இருந்து ATC-க்கு (விமானக் கட்டுப்பாட்டு நிலையம்) வந்த தகவலின் பேரில் பயணிகள் தரையில் இறக்கப்பட்டனர். சந்தேகத்திற்குரிய தொழில்நுட்பக் கோளாறு குறித்து முன் எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், ராய்ப்பூர் விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வந்த ஒரு விமானத்தில் கதவு திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பயணிகள் விமானத்தில் சுமார் 40 நிமிடங்கள் சிக்கிக்கொண்டனர். பராமரிப்பு ஊழியர்கள் துரித நடவடிக்கையுடன் கதவை திறந்து அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
தொடர்ந்து நடைபெறும் இவ்வகை தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து விமான பயணிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விமான பராமரிப்பு தரம் மற்றும் ஆய்வுப் பணிகள் எவ்வளவு நிரம்பியவையாக உள்ளன என்பதற்கான விசாரணை அவசியமாக உள்ளது.