விழுப்புரம்: பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திரு வி க வீதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் விழுப்புரம் நகரப் பகுதியில் விராட்டி குப்பத்தை சேர்ந்த தம்பதிகளின் மகன் மோகன்ராஜ் (17 வயது) 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார் மோகன்ராஜ். தனியார் பள்ளியில் காலை 7 மணி அளவில் நடைபெறும் சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ள சென்றுள்ளார். வகுப்பறையில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் திடீரென வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கி விழுந்த மாணவனை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர் மோகன் ராஜுக்கு மூச்சு திணறல் இருப்பதால் இங்கு ஆக்ஸிஜன் இல்லாததால் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.