திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!
நேற்று சிலி நாட்டில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்று சிலி. நேற்று அங்குள்ள எல் லொவா மாகாணம் சான் பெட்ரோ டி அடகெமொ நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அலுவலக கட்டிடங்கள் மற்றும் வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கின.
கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிவியா நாட்டின் எல்லையில் உள்ள இந்த நகரத்திலிருந்து 104 கிலோமீட்டர் தொலைவில் 93 அடி ஆழத்தில் இந்த நிலை நடக்கும் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 அளவில் பதிவானதாக ஐரோப்பிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
கட்டிடங்கள் தொடர்ந்து அதிர்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் சமவெளி பகுதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் சேத விபரங்கள் குறித்த தகவலும் வெளிவரவில்லை. சுனாமி எச்சரிக்கையும் இதுவரை விடப்படவில்லை.
பசிபிக் கடலை ஒட்டிய தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலி நாடு பசிபிக் ரிங்க் ஆஃப் ஃபயர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இது பசிபிக் பெருங்கடல் படுகையில் உள்ள பகுதி. இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதனாலேயே இந்த பகுதியில் அமைந்துள்ள சிலியில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. இங்கு கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 526 மக்கள் உயிரிழந்தனர். அப்போது 8.8 ரிக்டர் அளவில் பதிவானது குறிப்பிடத் தக்கது.




