இரவு நேரத்தில் வீட்டுக்கு திரும்பிய ஒரு இளம்பெண், சாவி இல்லாத காரணத்தால் நடுரோட்டில் தவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செப்டம்பர் 26ம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷிவானி சுக்லா என்ற இளம்பெண் கர்பா நடன விழாவை முடித்து ரேபிடோ பைக் டாக்சி மூலம் வீட்டுக்கு வந்துள்ளார். வீடு வந்தவுடன் தான் சாவி தன்னிடம் இல்லையென தெரிந்துள்ளது. ரூம்மேட் வெளியே சென்றிருந்ததால், அந்த பெண் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், அவரை இறக்கி சென்ற ரேபிடோ டிரைவர் நிலைமையை கவனித்து, அந்த பெண்ணிடம், மேடம், உங்கள் தோழி வரும்வரை நான் உங்களுடன் காத்திருக்கிறேன், என்று கூறி அங்கிருந்து செல்லாமல் பாதுகாப்பாக அங்கேயே நின்றுள்ளார். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்:
கர்பா நடனம் முடித்து வீடு திரும்பும் போது சாவி இல்லாமல் போனது. நள்ளிரவு நேரத்தில் சாலையில் தனியாக நின்றேன். ஆனால், ரேபிடோ டிரைவர் என்னுடன் தங்கி இருந்தார். இது எனக்கு நிம்மதி அளித்தது. இன்னும் நம் சமூகத்தில் நல்ல மனசுள்ளவர்கள் இருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரேபிடோ டிரைவரை பலரும் பாராட்டி வருகின்றனர். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இப்படிப்பட்ட மனிதர்கள் நம் சமூகத்தின் பெருமை,”
“இவரைப் போன்றவர்களே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துகிறார்கள்,”
என பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ரேபிடோ ப்ரோ! உங்களின் அனைத்து கனவுகளும் நிறைவேறட்டும், என்று ஒருவர் கருத்து பதிவு செய்திருந்தார். இன்னொருவர்,
இவரைப் போன்றவர்கள் நிலக்கரி சுரங்கத்தில் கிடைக்கும் வைரம் மாதிரி, என்று குறிப்பிட்டிருந்தார்.
பெண்கள் இரவு நேரங்களில் பைக் டாக்சியை பயன்படுத்தும் போது பாதுகாப்பு குறித்த பல கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இந்த ரேபிடோ டிரைவர் எடுத்த இந்த நடவடிக்கை, “இன்னும் மனிதநேயம் உயிருடன் இருக்கிறது” என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு என சமூக வலைதளங்கள் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


