ருத்ரபிரயாக், ஜூன் 15 உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதர்நாத் யாத்திரை பாதையில் தொடர்ச்சியாக நிகழும் ஹெலிகாப்டர் விபத்துகள், யாத்திரிகர்களிடையே பெரும் அச்சத்தையும், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து கடுமையான சந்தேகத்தையும் எழுப்பியுள்ளன. புதியதாக, டேராடூனில் இருந்து புறப்பட்டு கேதர்நாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுண்ட் வனப்பகுதியில் மோசமான வானிலை காரணமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். கடந்த 6 வாரங்களில் இது 5வது விபத்து என்பது கவலைக்கிடமானது.
அதே பாதையில் நடந்த தொடர்ச்சியான விபத்துகள் :
மே 7: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் உயிரிழப்பு தவிர்ந்தது.
மே 15: கவுரிகுண்ட் அருகே ஹெலிகாப்டர் விழுந்தது பயணிகள் உயிர் தப்பினர்.
மே 17: டெயில் ஸ்டிரைக் காரணமாக லேண்டிங் விபத்து காயமின்றி மீட்பு.
ஜூன் 8: தனியார் ஹெலிகாப்டர் மலையில் மோதி நொறுங்கியது.
ஜூன் 15: தற்போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி.
இந்த தொடர்ச்சியான விபத்துகள், வானிலை மாற்றங்களை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை, சரியான வழிகாட்டிகள் இல்லாமை, மற்றும் காலத்திற்கேற்ப ஹெலிபேட்கள் இல்லாதது ஆகியவற்றின் விளைவாகவே உருவாகின்றன என விமான பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். 2025ல் இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு ஆபரேட்டர்கள் முழுமையாக ஒத்துழைக்கவில்லையா? என்பது தற்போது எழுந்துள்ள முக்கியக் கேள்வி. ஒவ்வொரு மே மற்றும் ஜூன் மாதத்திலும் ஹெலிகாப்டர் சேவைகள் அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் வானிலை மோசமாவதும், பெரும் கூட்டம் திரள்வதும், விமான சேவைகளின் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், “நிலைத்த பாதுகாப்பு இல்லையெனில் ஹெலிகாப்டர் சேவைகளை இடைநிறுத்தம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதற்கான முழுமையான ஆய்வு நடைபெறுகிறது.