இயக்குநராகும் ரவி மோகன்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன், தற்போது இயக்குநராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் (Ravi Mohan Studios) நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் “AN ORDINARY MAN” படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிமையான முறையில் பூஜையுடன் தொடங்கியது. நடிகராக முத்திரை பதித்த ரவி மோகன், முதல்முறையாக மெகா போன் பிடித்துள்ளது திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹீரோவாக யோகி பாபு:
இந்தப் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான சம்பவங்களையும், அதில் உள்ள உணர்வுபூர்வமான மற்றும் நகைச்சுவையான தருணங்களையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. யோகி பாபுவின் எதார்த்தமான நடிப்பும், ரவி மோகனின் புதிய கோணத்திலான இயக்கமும் இணைந்து ஒரு தரமான வாழ்வியல் திரைப்படத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் எதிர்பார்ப்பு
ஏற்கனவே ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘ப்ரோ கோட்’ என்ற படம் தயாராகி வரும் நிலையில், இது அந்த நிறுவனத்தின் இரண்டாவது படைப்பாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நடிகரே இயக்குநராகக் களம் இறங்குவதால், இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை மீது மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளது. யோகி பாபுவுடன் மற்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் இணையவுள்ளனர். படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.


