இன்று ‘விடுதலை’, ‘கொட்டுக்காளி’ என கதையின் நாயகனாக ஜொலிக்கும் சூரி, ஒரு காலத்தில் ஒரு வேளை சோற்றுக்காகவும், ஒரு சிறு காட்சியில் முகம் காட்டவும் மதுரையில் இருந்து சென்னை வந்து படாதபாடு பட்டவர். வெற்றிகள் எளிதில் கிடைப்பதில்லை என்பதற்கு சூரியின் இந்த ஒரு சம்பவம் மிகப்பெரிய உதாரணம்.
உயிரைக் கிழித்த அந்த வார்த்தை: ஆரம்ப காலத்தில் ஒரு படத்தில் நடிக்க சூரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. “ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்துவிட்டது” என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, படக்குழுவினர் அவருக்கு ஆடை அளவு (Costume Measurement) எடுத்துள்ளனர். அந்த தருணத்தில், பல வருடக் கனவு நனவான சந்தோஷத்தில் சூரியின் கை, கால்கள் நடுங்கியுள்ளன, கண்கள் கலங்கியுள்ளன.
ஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. திடீரென அங்கிருந்த ஒருவர், “அந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவரை சிபாரிசு செய்துவிட்டார்கள், இவருக்குப் பதில் அவர் நடிக்கட்டும்” என்று கூறியுள்ளார். அடுத்த நொடியே, “போட்டுக்கொண்டிருக்கும் சட்டையைக் கழற்றுங்கள்” என சூரியிடம் சொல்லப்பட்டுள்ளது.
அதே இடத்தில் உறைந்து போனேன்: இதைச் சொல்லும்போதே சூரியின் குரல் இன்றும் தழுதழுக்கிறது. “சான்ஸ் போயிடுச்சுனு சொன்னதை விட, அந்த சட்டையை கழட்டுங்கனு சொன்னது தான் என் உயிரை எடுத்தது போல இருந்தது. யாருக்காகவோ தைக்கப்பட்ட சட்டையை நான் போட்டுக்கொண்டிருந்தேன். அந்த இடத்திலேயே அதைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். சென்னைத் தெருக்களில் அழுதுகொண்டே நடந்தேன்” என அவர் அந்த வலியைப் பகிர்ந்துள்ளார்.
அவமானமே மூலதனம்: அன்று அதே இடத்தில் சட்டையை கழற்றச் சொன்ன அதே திரையுலகம், இன்று சூரியின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கிறது. அவமானங்களை உரமாக்கி, சின்னச் சின்ன வேடங்களில் (வெண்ணிலா கபடி குழு பரோட்டா காமெடி போல) நடித்து, இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக அவர் மாறியிருக்கிறார்.


