அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 33 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 274 பேர் உயிரிழந்த இந்த விபத்து நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் சுமார் 2,000 மாணவர்கள் தங்கியிருந்தனர். அந்த விமானம் விடுதிக்கே நேராக செல்லும் நிலையில் இருந்தபோதும், விமானி கடைசி நொடிகளில் விமானத்தின் திசையை மாற்றி, அதனை ஓரங்கட்டமான பகுதியில் விழச் செய்தார். இந்த நிகழ்வு குறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறியதாவது:
“விமானம் எங்கள் தலைக்கு மேலாகவே பறந்து சென்றது. அது மிகவும் தாழ்வாக பறந்தது. பின் ஒரு நிமிடத்தில் பெரிய சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் அது விடுதிக்கு மேல் விழுந்திருந்தால், நாங்கள் இங்கே உயிரோடு இருந்திருக்கவே முடியாது. விமானி கடைசி நொடிகளில் எடுத்த முடிவால் பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டது. அவருக்கு ராயல் சல்யூட்,” எனத் தெரிவித்தார். விமானம் விழுந்ததும், ஏற்பட்ட தீயில் சிக்கிய சிலரை அப்பகுதி மக்கள் மீட்டனர். சுமார் 15 முதல் 20 பேர் உயிருடன் வெளியே அழைத்துவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கடும் சோகமாக கருதப்படுகிறது. இருப்பினும், விமானியின் தைரியம் மற்றும் கடமை உணர்வால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.