புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவை சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் பதவியேற்றனர். மாநிலங்களவை உறுப்பினர்களாக அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவை எம்பிகளாக திமுக சார்பில் பி வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பதவியேற்றனர். அதிமுகவை சேர்ந்த எம்பி களுக்கு 28ஆம் தேதி பதவியேற்பு என்று இருந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் இன்ப துரை மற்றும் தனபால் ஆகியோர் பதவியேற்றனர்.
ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக தம்பிதுரை, தர்மர் மற்றும் சி வி சண்முகம் ஆகியோர் இருந்த நிலையில் புதிய உறுப்பினர்களாக இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இணைந்துள்ளனர். அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு வைகோ, சண்முகம், எம் எம் அப்துல்லா, அன்புமணி ,சந்திரசேகரன் மற்றும் பி வில்சன் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் ஆறு இடங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக அதிமுக மற்றும் மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆறு வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது.