குஜராத், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பயங்கர விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இந்த விமான விபத்து இந்தியாவின் சமீபத்திய காலங்களின் மிகப்பெரிய மனித இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில், இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானம், பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்ததில் அங்கு தங்கியிருந்த மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியா தலைவர் என். சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முழுமையான மருத்துவச் செலவுகள் மற்றும் தேவையான ஆதரவை குழுமம் வழங்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் சேதமடைந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதிக்காக புதிய கட்டடம் கட்டித் தரப்படும் என்றும் டாடா குழுமம் உறுதியளித்துள்ளது.
இதுபோயிங் 787 விமான வகையின் முதல் உயிரிழப்பு விபத்து ஆகும். இந்த விபத்து குறித்து விமானப் பராமரிப்பு கோளாறு, விமான நிலைய பாதுகாப்பு ஆகிய கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா சார்பாக பறக்கும் பாதுகாப்புத் துறைகள் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளன.