தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கடும் இழுபறி நிலவி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த முறை 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கூட்டணியில் உள்ள அமித் ஷா தலைமையிலான பாஜக, குறைந்தது 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்ற சந்திப்பில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான பேச்சுவார்த்தை எந்த முடிவும் இன்றி நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக 18 தொகுதிகளையும், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக 12 தொகுதிகளையும் கோரியிருப்பது, தொகுதி பங்கீட்டை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு அதிக இடங்கள் வழங்க வேண்டும். 2029 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகக்கு கூடுதல் இடங்கள் வழங்கப்படும் என அவர் முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், தினகரன் மற்றும் அன்புமணியை டெல்லிக்கு அழைத்திருப்பது கூட்டணியில் புதிய மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மொத்தத்தில், தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சூழ்நிலையில், இந்த கூட்டணி பேச்சுவார்த்தை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.


