பாமக முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் விஜிகே மணிகண்டன். “காடுவெட்டி குருவை சிங்கப்பூர் சிகிச்சைக்கு அனுப்பாமல் தடுத்து, மருத்துவ முறையில் அவரை கொன்றது அன்புமணி தான்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜிகே மணிகண்டன், காடுவெட்டி குருவின் உறவினரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகவே பாமக கட்சியில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது தந்தை ராமதாஸ் இடையே சலசலப்புகள் நிலவி வந்த நிலையில், இக்குற்றச்சாட்டுகள் கட்சியின் உள்நிலை சிக்கல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன.
1984ல் வன்னியர் மக்களுக்காக சங்கத்தை நிறுவி, அந்த மக்களின் நலனுக்காக முழு நேரமும் உழைத்த ராமதாஸ், கட்சியை நிலைநாட்டியவர். இன்று அவரை ஓய்வு பெறச் சொல்லி, கட்சியை கைப்பற்றி, சொத்துகளையும் ஆட்சி அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அன்புமணி ராமதாஸ் முயற்சி செய்கிறார், என்று மணிகண்டன் தெரிவித்தார்.
காடுவெட்டி குருவின் மரணத்தை ஒட்டி அவர் கூறியபோது, குருவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற எல்லா ஏற்பாடுகளையும் ராமதாஸ் முன்பு செய்து வைத்திருந்தார். ஆனால், அதில் தடை ஏற்படுத்தி சிகிச்சை மறுத்து, மருத்துவ முறையில் கொலையை திட்டமிட்டது அன்புமணி தான், என்று பகீர் குற்றம்சாட்டினார்.
அதோடு, காடுவெட்டி குரு இறப்பதற்கு 15 நாட்கள் முன்பே இவர் கூறியபடி, அவரது மரணத்தை மறைத்து எந்த கலவரமும் ஏற்படாமல் காவல் துறையின் உதவியுடன் கட்டுப்படுத்தினர். இதேபோல், ராமதாஸ் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் மீது எப்போது வேண்டுமானாலும் வன்முறை நடக்கலாம், என்று தெரிவித்தார்.
அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அன்புமணி ராமதாஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், பாமக கட்சியின் சொத்து ஆவணங்கள் அனைத்தும் தற்போது அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மணிகண்டன் தெரிவித்தார். “பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் எங்கே, யாரின் பெயரில் உள்ளன என்பதை ராமதாஸ் குடும்பமே அறியவில்லை.
ஆவணங்கள் அனைத்தும் அன்புமணியின் கையில் இருப்பதால் அவர் எந்த அளவிலும் ஆபத்தை உருவாக்க முடியும்” என்றார். எனக்கு பாமக கட்சியையே பிடிக்காது, ஆனால் ராமதாஸை ஆதரிக்கிறேன். அவர் தனது வாழ்க்கையை முழுமையாக இந்த மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், அன்புமணிக்கு உழைக்க தெரியாது. அன்புமணி மற்றும் அவரது மனைவியாலேயே ராமதாஸ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.