அதிரடி ஊக்கத்தொகை அறிவிப்பு:
ஆந்திராவில் குறைந்து வரும் கருவுறுதல் விகிதம் (TFR 1.5) மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, முதல்வர் சந்திரபாபு நாயுடு “மக்கள் தொகை மேலாண்மை” என்ற புதிய வரைவு கொள்கையை வெளியிட்டுள்ளார். இதன்படி, மாநிலத்தில் 2-வது அல்லது 3-வது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குத் தலா ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்தத் திட்டம், எதிர்கால மனித வள நெருக்கடியைத் தவிர்க்க எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
பராமரிப்பு மற்றும் இலவச கல்வி:
இந்தத் திட்டத்தின் கீழ் “போஷனா-சிக்ஷா-சுரக்ஷா” (Poshana-Siksha-Suraksha) தொகுப்பின் கீழ், 3-வது குழந்தைக்கு 5 வயது வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், அந்தக் குழந்தைக்கு 18 வயது வரை அரசு மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட உள்ளது. இது தவிர, அரசு ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுமுறை மற்றும் தந்தையர்களுக்கு 2 மாத தந்தைவழி விடுமுறை (Paternity Leave) போன்ற சலுகைகளும் இந்தக் கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ளன.
ஏன் இந்த மாற்றம்?
ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் நிலவும் முதியோர் மக்கள் தொகை சிக்கல் ஆந்திராவிற்கும் வந்துவிடக்கூடாது என்பதே முதல்வரின் இலக்கு. 2047-ல் ஆந்திராவின் மக்கள் தொகையில் 23% முதியவர்களாக இருப்பார்கள் என்ற எச்சரிக்கையையடுத்து, பிறப்பு விகிதத்தை 2.1-ஆக உயர்த்த இந்த மெகா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் தொகுதிகள் மறுவரையறையின் போது பிரதிநிதித்துவம் குறையாமல் இருக்கவும் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.


