வானுயர எழும்பும் தீப்பிழம்புகள் ஆந்திராவில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து விபத்து மீட்புப் பணியில் பெரும் பின்னடைவு
அமராவதி / கோதாவரி மாவட்டம்: ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டப் பகுதியில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி (ONGC) எரிவாயு கிணற்றின் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்: எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகத் தீப்பிடித்த நிலையில், அதிக அழுத்தம் (High Pressure) காரணமாகத் தீயானது வானுயர எழும்புகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓஎன்ஜிசி தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் பல தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இருப்பினும், கேஸ் தொடர்ந்து கசிந்து கொண்டிருப்பதால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.
மக்கள் வெளியேற்றம்: பாதுகாப்பு கருதி, விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காணப்படுவதால் பொதுமக்களுக்குச் சுவாசப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
காரணம் என்ன? குழாயில் ஏற்பட்ட துரு அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு விநியோகத்தை மெயின் வால்வ் (Main Valve) மூலம் நிறுத்தினால் மட்டுமே தீயை முழுமையாக அணைக்க முடியும் என்பதால், அந்த முயற்சியில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


