நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதிகளுக்கு விவாகரத்து அளிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன் என்பவர். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
ரவி மோகன் தனது மனைவியான ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து அளிக்க கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த 3-வது குடும்ப நல நீதிமன்றம் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரையும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்துமாறு உத்தரவிட்டது. இதுவரை 3 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் சமரச தீர்வு மையம் வழக்கை விசாரித்தது. மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகள் அனைத்தையும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தேன்மொழி இன்று (21.05.2025) மீண்டும் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் ரவி மோகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரவி மோகன், தனக்கு ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை,மேலும் அவரிடமிருந்து விவாகரத்து அளிக்க வேண்டும் எனவும், சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கையை தள்ளுபடி செய்யவும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தார்.
ஆர்த்தி சார்பில் அளித்த மனு தாக்கலில்” மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சமாக ரவி மோகன் வழங்க வேண்டும்”என கோரிக்கை வைத்துள்ளார். இதனை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் அதற்கான பதிலை ஜூன் மாதம் 12 ஆம் தேதிக்குள் ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும்,இந்த வழக்கை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.