தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும், அவரது வரிசையைத் தொடர்ந்து அவரது மகன் சண்முக பாண்டியன் இன்று “படை தலைவன்” திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்துகிறார். இயக்குநர் அன்பு இயக்கிய இந்த படம், யானைகள் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு சமூகக் கதையை சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ளது. இன்று உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், நேற்று இரவு நடந்த பிரீமியர் ஷோவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களால் வரவேற்கப்பட்டது. விஜயகாந்தை காட்சிகளில் AI மூலம் உயிர்ப்பித்து, திரும்பவும் திரையில் கொண்டு வந்திருப்பது ரசிகர்களிடையே உணர்ச்சி வரிகளை எழுப்பியுள்ளது. “விஜயகாந்தை மீண்டும் திரையில் காணும் அனுபவம் மிக உணர்வுபூர்வமானது. சண்முக பாண்டியன் தனது அப்பாவின் உருவத்தையே திரையில் கொண்டு வந்துள்ளார். இது ஒரு சமூக சிந்தனையோடு கூடிய ஒரு படம்.” என்றார் சரத்குமார். ராதா ரவி: “சண்முக பாண்டியன் என்னை ஆச்சரியப்பட வைத்தார். ஒரு இளம் நடிகரிடம் இத்தனை மெச்சத்தக்க நடிப்பு எதிர்பார்க்கவில்லை” என்றார்.
“என் கணவரை திரையில் மீண்டும் காணும் தருணம் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. என் மகன் சண்முகன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.” என்று எமோஷனலாக கூறினார் பிரேமலதா. இயக்குநர் செல்வமணி: “அப்பா போலவே பையனும் திரையில் சாதிக்கிறார். இவரது நடிப்பில் அப்பாவின் கம்பீரம் தெரிகிறது.” என்றார்.
இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் யாமினி சந்தரின் நடிப்பு இப்படத்திற்கு மேலும் பங்களிக்கின்றன. “கும்கி” திரைப்படத்துக்குப் பிறகு யானைகளை மையமாகக் கொண்ட ஒரு படமாக, “படை தலைவன்” தனித்துவம் பெற்றதாகவும், குடும்பத்தோடு பார்க்கத்தக்க ஒரு திரைப்படமாகவும் விமர்சனங்கள் வெளியாகின்றன.
சமூக ஊடகங்களில் ஏற்கனவே ரசிகர்கள் படம் குறித்து நேர்மறை கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சண்முக பாண்டியனின் இந்த அறிமுக முயற்சி, கேப்டனின் மரபை தக்கவைத்து, தமிழ் சினிமாவில் ஒரு புதிய நட்சத்திரத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.