இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. மொத்த கொரோனா வைரஸால் 2,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரள மாநிலம் 1,147 தொற்று நபர்களுடன் முன்னணியில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (424), டெல்லி (294), தமிழ்நாடு (148) மற்றும் மேற்கு வங்கத்தில் (116) ஆகிய மாநிலங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக NB.1.8.1 மற்றும் LF.7 எனும் புதிய வைரஸ் வகைகள் என கருதப்படுகின்றன. இந்த வகைகள் அதிக பரவல் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான நோயாளிகள் லேசான அறிகுறிகளுடன் குணமடைந்து வருகின்றனர். தைராய்டு மற்றும் அமைதியான மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மாநில பொது சுகாதாரத் துறை, மாவட்ட கண்காணிப்பு பிரிவுகளுக்கு தினசரி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்திய அரசின் சுகாதார அமைச்சகம், மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஜூன் 2க்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் மூலம், அதிக பாதிப்புள்ள பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.