கடந்த சில நாட்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு, இன்று திடீரென பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டி 120 டாலர் வரை சென்ற நிலையில், இன்று அது அதிரடியாக 10 விழுக்காடு குறைந்து 90 டாலருக்கும் கீழ் (சுமார் 85 – 88 டாலர்) வந்துள்ளது.
இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒற்றை அறிவிப்புதான் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் உடனான போர் குறித்துப் பேசிய டிரம்ப், “இந்த போர் மிக விரைவில் முடிவுக்கு வரும், திட்டமிட்டதை விடவும் ராணுவ நடவடிக்கைகள் வேகமாக நடந்து முடிந்துள்ளன” என்று தனது வழக்கமான பாணியில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே உலகப் பங்குச்சந்தைகள் ஏற்றம் காணத் தொடங்கின, அதேசமயம் கச்சா எண்ணெய் விலை மளமளவெனச் சரிந்தது. ஈரான் மீதான அணு அச்சுறுத்தல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ஹோர்மோஸ் நீரிணைப் போக்குவரத்தைச் சீர் செய்ய அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் தங்களின் அவசரக் கால எண்ணெய் இருப்பை (Strategic Reserves) சந்தைக்கு விடத் தயாராக இருப்பதாக அறிவித்ததும் இந்த விலை சரிவுக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 110 டாலருக்கு மேல் விற்ற கச்சா எண்ணெய், இன்று மாலை நிலவரப்படி 87 டாலர் வரை சரிந்துள்ளதால், இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு இது ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அச்சத்தில் இருந்த பொதுமக்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது.


