கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள பகுதியில், 5 மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டிராக்டர் டிரைவரான தமிழரசன் தனது மனைவி சத்யவாணி மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார்.
தமிழரசன் வேலைக்குச் செல்லும் நேரத்தை பயன்படுத்தி, அவரது தந்தை ராஜன் மற்றும் மருமகள் சத்யவாணி இடையே நெருக்கம் அதிகரித்து, பின்னர் அது தவறான உறவாக மாறியதாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். இதனால் குடும்பத்தில் ஏற்கனவே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நாளன்று, குழந்தை தொடர்ந்து அழுததால் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததாக நினைத்த ராஜன், குழந்தையின் மூக்கை அழுத்தி மூச்சுத்திணற வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சத்யவாணி குழந்தையின் உடலை அருகிலிருந்த கிணற்றில் வீசி மறைக்க முயன்றுள்ளார்.
பின்னர் குழந்தை காணாமல் போனதாக கூறிய நிலையில், தேடுதல் நடத்திய தமிழரசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் கிணற்றில் குழந்தையின் சடலத்தை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, மாமனார் ராஜன் மற்றும் சத்யவாணி ஆகியோரைக் கைது செய்துள்ளனர். சிறிய குழந்தை என்று கூட பாராமல் குடும்ப உறவின் பெயரில் தகாத உறவால் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


