காந்திநகர்: குஜராத் அகமதாபாத்தில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அவர்களது குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டன. விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மேகானி நகர் பகுதியில் இருந்த மருத்துவ கல்லூரி மீது விழுந்து கோர விபத்து ஏற்பட்டது.
இதில் பயணம் செய்த பணியாளர்கள் 12 பேர், பயணிகள் 240 பேர் என மொத்தம் 242 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். தரையில் இருந்தவர்கள் 29 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. பலத்த காயங்களுடன் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே விமானத்தில் உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தேடி வரும் நிலையில் டிஎன்ஏ சாம்பிள் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்படுகிறது.
அதன்படி உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளைக் கொண்டு உடல்களை உறவினரும் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை 47 பயணிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், 87 பயணிகளின் டிஎன்ஏ சாம்பிள் பொருந்தியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஜூனாகத், கேதா, மெக்சானா, அகமதாபாத் மற்றும் பாவ்நகர் போன்ற மாவட்டங்கள் சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் உடலானது பாதியாகவோ அல்லது முழுவதுமாகவோ எரிந்த நிலையில் காணப்படுவதால் உடல்களை தேடப்படும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.