கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசல் சம்பவம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பின்னணியில் அரசியல் சதி உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழக பாஜக சிபிஐ விசாரணை கோரியுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கோரமான சம்பவம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவம் கண்துடைப்பாக முடிந்து விடக்கூடாது.
அரசியல் சதி இருக்கிறதா என்பதை கண்டறிய சிபிஐ விசாரணை உடனடியாக அறிவிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். திமுக அரசு நியமித்துள்ள முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே.
உண்மை வெளிக்கொணர சிபிஐ விசாரணை தவிர வேறு வழி இல்லை, என்றும் வலியுறுத்தினார்.
இறந்தவர்களின் உடல்களுக்கு போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது வீடியோ பதிவு மூலம் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டுமென பாஜக கோரியுள்ளது. உடல்களை விரைவில் ஒப்படைப்பது அவசியமானது என்றாலும், உண்மைகளை மறைக்கும் வகையில் சமரசம் ஏதுமின்றி சட்டத்தின் வழிகாட்டுதல்படி செயல்பட வேண்டும், என பிரசாத் தெரிவித்துள்ளார். கரூர் நிகழ்வில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தவறுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும்
ஐஜி நிலை அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என பாஜக கோரியுள்ளது. மாவட்டக் காவல், போக்குவரத்து காவல், ஆயுதப்படை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் பங்கும் ஆய்வு செய்யப்பட வேண்டும்,என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும்,
ராகுல் காந்தி, விஜய்யிடம் திமுக அரசோடு இணக்கமாகச் செல்லுங்கள், இல்லையெனில் பின் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டியுள்ளார், என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அதனை உறுதி செய்ய ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. விஜய் தனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் உண்மையுடன் நடந்து கொள்வார் என நம்பிக்கை தெரிவித்த பாஜக, நடிகர் விஜய் எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் உட்படாமல் நியாயமான விசாரணைக்காக போராடினால், பாஜக முழுமையாக அவருக்கு துணை நிற்கும்,என்று கூறியுள்ளது.





