அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் விமானம் மோதியதில், பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். கட்டடத்தில் இருந்த மருத்துவ மாணவரகளும் பலியானதை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 265 ஆக உயர்ந்தது.
இந்த விபத்தில், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபானி (வயது 68) உயிரிழந்துள்ள செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வசிக்கும் தனது மனைவியையும் மகளையும் பார்த்து வருவதற்காக, விஜய் ரூபானி இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டடத்தில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரூபானி தனது அரசியல் வாழ்நாளில் “1206” என்ற எண்ணை அதிர்ஷ்ட எண்ணாக கருதி பயன்படுத்தியதாக தெரிகிறது. அவரது ஸ்கூட்டர் முதல் முதல்வர் பதவிக்கால அரசுப் போக்குவரத்து வாகனங்கள் வரை அனைத்தும் 1206 என்ற பதிவு எண்ணுடன் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர் இறந்த தேதி 12ம் தேதி, மாதம் ஜூன் (6வது மாதம்), போர்டிங் நேரம் 12:10 மணி, மேலும் விமானத்தின் சீட் எண் 12. என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோஹன் நாயுடு உடனடியாக விரைந்து மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த பயணிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் ரூபானியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம்தேதி மியான்மரில் பிறந்த விஜய் ரூபானி, 1996-97 இல் ராஜ்கோட் மேயராகவும், 2006-12 காலப்பகுதியில் மாநிலங்களவை உறுப்பினராகவும், 2016 முதல் 2021 வரை குஜராத் முதல்வராகவும் பணியாற்றியவர். அவர் போக்குவரத்து, தொழிலாளர், நீர்வள உள்ளிட்ட துறைகளிலும் அமைச்சராக பதவி வகித்தார்.
விஜய் ரூபானியின் மரணம், இந்திய அரசியலுக்கே ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. அவரின் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்பட்ட “1206” என்ற எண், இறுதியில் அவரது கடைசி பயணத்தின் சின்னமாக மாறியிருக்கிறது.