இஸ்ரோவில் முன்னாள் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றிய நெல்லை முத்து இன்று (ஜூன் 16) திருவனந்தபுரத்தில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு 74 வயதாகும். அவரது உடல் மதுரையில் உள்ள அவரது மகள் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கேயே இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த சு. முத்து, ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வகத்தில் தனது பணியைத் தொடங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய நெல்லை முத்து, இந்திய விண்வெளித் திட்டத்தின் வளர்ச்சியில் தன்னாலான பங்களிப்பை செய்துள்ளார்.
விஞ்ஞானத் துறையில் மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. அறிவியல், வரலாறு, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது நாலு நூல்களுக்கு தமிழக அரசின் பரிசுகள் கிடைத்துள்ளன. மேலும், மலேசியாவில் அமைந்துள்ள உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை வழங்கிய ‘கவிமாமணி’ விருதையும் பெற்றுள்ளார். விஞ்ஞானம் மற்றும் இலக்கியம் ஆகிய இரு துறைகளையும் இணைத்தெழுந்த நெல்லை முத்துவின் மறைவு, அறிவியல் சமூகத்துக்கும், தமிழ் இலக்கிய உலகத்துக்கும் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.