சென்னை:சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
பயனாளிகள்: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் சுமார் 29,455 தூய்மைப் பணியாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். இதில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், சுய உதவிக்குழு ஊழியர்கள் உட்பட அனைவரும் அடங்குவர்.
உணவு: தூய்மைப் பணியாளர்களின் மூன்று வேளை ஷிஃப்ட் நேரங்களுக்கு ஏற்ப, காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் கட்டணமில்லா உணவு வழங்கப்படும்.
நிதி ஒதுக்கீடு: இந்தத் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குச் செயல்படுத்த, தமிழ்நாடு அரசு ரூ.186.94 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
உணவு விநியோகம்: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தர நிர்ணயங்களுக்கு இணங்க சமைக்கப்படும் உணவு, 512 இடங்களில் பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும். சுகாதாரமான முறையில் உணவுப் பெட்டிகளில் (Tiffin carriers) வழங்கப்படும்.
மேயர் கருத்து: “தூய்மைப் பணியாளர்கள் பல நாட்கள் ணவு உண்ணாமல், நீண்ட நேரம் வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டம், அவர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதற்குப் பணியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” என்று மேயர் பிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடக்கம்: இந்தத் திட்டம் நவம்பர் 15-ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவாக்கப்படும்.
தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஆறு சிறப்பான நலத்திட்டங்களில் இந்த இலவச உணவுத் திட்டமும் ஒன்றாகும்.





