தமிழ்நாடு அரசு புதிய கல்வி நவீனமயமாக்கத் திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. கடந்த மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025-26 பட்ஜெட்டில், இதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மாணவர்கள் லேப்டாப் அல்லது டேப்லெட் என விருப்பத்தின்படி தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தாலும், தொடக்க கட்டத்தில் லேப்டாப் மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 முக்கிய நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்பு:
இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு மின்னணு கழகம் டெண்டர் அறிவித்துள்ளது. இதில், உலகப்பிரபலமான Acer, Dell, HP நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. ஒப்பந்த புள்ளிகள், விலை விபரங்கள் ஆகியவை இறுதியாக முடிவுபெற்றதும், அரசின் கொள்முதல் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
லேப்டாப் சிறப்பு அம்சங்கள்:
8GB RAM
256GB SSD.
128 MB VRAM அல்லது அதற்கு மேல் கிராபிக்ஸ்
14 அல்லது 15.6 அங்குல திரை.
குறைந்தபட்சம் Intel i3 அல்லது AMD Ryzen 3 சமமான செயலி (4 கோர், 8 Threads, Hyper Threading உடன்)
மொத்தம் 38 மாவட்டங்களில், அரசும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் 4,600க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இந்த லேப்டாப்கள் விநியோகிக்கப்படும். இதில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 366 கல்லூரிகள் பங்கெடுக்கின்றன. மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், உயர்தர தொழில்நுட்பம் கொண்ட இந்த திட்டம் வருங்கால மாணவர்களுக்கு ஒரு புதிய முன்னேற்றத்தை உருவாக்கும் என அரசு நம்புகிறது.