சென்னையில் கடந்த சில நாட்களாக விண்ணைத் தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (ஏப்ரல் 9, 2026) சற்று தணிந்துள்ளது. நேற்று சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,600 அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,000 ஆகக் குறைந்துள்ளது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாகச் சரிந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.5,000 குறைந்து, இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2.60 லட்சம் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.260 ஆக உள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவி வந்த அமெரிக்க – ஈரான் போர் பதற்றங்களுக்கு இடையே, இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் சம்மதித்துள்ளதாக வெளியாகி வரும் செய்திகளே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். போர் நிறுத்த அறிவிப்பால் உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான பாதுகாப்பான முதலீடுகளைக் குறைத்து, பங்குச்சந்தை பக்கம் திரும்பியுள்ளனர்.
இதன் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை சர்வதேச அளவில் குறைந்து விலையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் விலை இன்னும் 60 சதவீதத்திற்கும் மேலாக உயர்வாகவே உள்ளது. சித்திரை மாதம் பிறக்க உள்ள நிலையில், இந்த விலை சரிவு நகை வாங்குபவர்களுக்கு ஒரு சிறிய ஆறுதலைத் தந்துள்ள போதிலும், வரும் நாட்களில் விலை மீண்டும் உயருமா அல்லது நிலைபெறுமா என்பதை சர்வதேசச் சூழலே தீர்மானிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.





