சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 10, 2026) மீண்டும் ஒரு புதிய ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,125 ஆக அதிகரித்துள்ளது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.5,000 உயர்ந்து, இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2.65 லட்சம் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.265 ஆக உள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், அமெரிக்க – ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையுமே இந்த விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதில் தாமதம் ஏற்படுவதால், முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இது உலகளாவிய அளவில் தங்கத்தின் தேவையை அதிகரித்து, விலையை உயர்த்தியுள்ளது. சித்திரை மாதம் பிறக்க உள்ள சூழலில், தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் நிலையாக இருப்பது திருமண வீட்டாருக்கும், சாமானிய மக்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளது. வரும் நாட்களில் சர்வதேசச் சூழலைப் பொறுத்தே விலையில் மாற்றங்கள் இருக்கும் எனச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.





