நூக் (Greenland): டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். “தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு அவசியம்” என அவர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதற்கு அந்நாட்டின் இளம் பிரதமர் ஜென்ஸ்-ஃப்ரெடரிக் நீல்சன் (34) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் திட்டவட்டம்: “கிரீன்லாந்து விற்கப்பட வேண்டிய ஒரு சொத்து அல்ல. நாங்கள் அமெரிக்கர்களாகவோ அல்லது டென்மார்க்கின் ஒரு பகுதியாகவோ இருக்க விரும்பவில்லை. நாங்கள் கிரீன்லாந்து மக்களாகவே இருக்க விரும்புகிறோம். எங்களை யாரும் ஆக்கிரமிக்க முடியாது” என நீல்சன் ஆவேசமாகத் தெரிவித்தார்.
டிரம்ப்பின் நக்கல் பதில்: கிரீன்லாந்து பிரதமரின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “அவர் (நீல்சன்) யாரென்றே எனக்குத் தெரியாது. அவர் ஏதோ ஒரு நாட்டின் தலைவராக இருக்கலாம், ஆனால் அமெரிக்காவின் முடிவுகளில் அவருக்கு எந்த வேலையும் இல்லை” என மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
ஏன் கிரீன்லாந்து மீது ஆசை?: கிரீன்லாந்தில் தங்கம், இரும்பு மற்றும் அரிதான ‘ரேர் எர்த்’ கனிமங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும், ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அமெரிக்காவுக்கு இந்தத் தீவு ஒரு முக்கிய ராணுவ மையமாகத் தேவைப்படுகிறது.
டேரிஃப் மிரட்டல்: இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் மீது டிரம்ப் 25% வரை வரி (Tariff) விதிக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த நீல்சன்? கடந்த 2025 ஏப்ரலில் கிரீன்லாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற ஜென்ஸ்-ஃப்ரெடரிக் நீல்சன், அந்நாட்டின் மிக இளைய பிரதமர் ஆவார். “வணிக ரீதியான முதலீடுகளை வரவேற்கிறோம், ஆனால் இறையாண்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.


