சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஒரிசா- வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் இன்று காலை முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாக கூறிய சென்னை வானிலை ஆய்வு மையம். அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தென்னிந்திய பகுதிகளின் மேல் கீழ் அடுக்கு வளிமண்டல சுழற்சி நிகழும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த ஏழு நாட்களில் தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த தரை காற்றுடன் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்காசி, நீலகிரி, தேனி,கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4:00 மணி வரை மிதமான அல்லது கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது.