சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு சாதி பிரிவின் காரணமாக ஆணவ படுகொலை நடந்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கூட்டத்து அய்யம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன்.
23 வயதாகும் இவர் பண்ணைகளுக்கு சென்று பால் கறந்து கொடுக்கும் கூலி வேலையை செய்து வந்துள்ளார். கணபதி பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரன் குடும்பத்தாருக்கும் ராமசந்திரன் பால் கறந்து கொடுத்துள்ளார். சந்திரனின் மகள் ஆர்த்திக்கும் ராமசந்திரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளனர். ஆனால் இருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதி பிரிவுகளின் காரணமாக அவர்களின் விருப்பத்தை குடும்பத்தார் எதிர்த்துள்ளனர்.
ராமச்சந்திரன் மீது ஆத்திரமடைந்து அவரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமச்சந்திரன் வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது பெண்ணின் தந்தை உள்பட 10 பேர் கொண்ட கும்பல் ராமச்சந்திரனை வழிமறித்து வெட்டி கொலை செய்துள்ளனர்.
இது குறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஆர்த்தி புகார் செய்துள்ளார். அவர் அளிக்கப்பட்ட மனுவில் சாதி வெறி மற்றும் ஆணவ படுகொலை என குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணமாக இருந்து குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் படி தண்டிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


