ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்ற ஐசிசி U19 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில், இந்திய இளம் அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது. இந்தத் தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் (Undefeated) சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ரூ.7.5 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு, “நமது இளம் வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் நாடே பெருமை கொள்கிறது” எனப் பாராட்டியுள்ளார்.
இந்த வெற்றியில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி செய்த மேஜிக் தான் ஹைலைட். இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் (15 பவுண்டரி, 15 சிக்ஸர்) குவித்து உலகையே அதிர வைத்தார். கேப்டன் ஆயுஷ் மாத்திரே 53 ரன்கள் எடுக்க, இந்தியா 50 ஓவர்களில் 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
ஐசிசி விதிகளின்படி ஜூனியர் உலகக்கோப்பைக்கு அதிகாரப்பூர்வப் பரிசுத் தொகை கிடையாது என்பதால், இந்திய வீரர்களை ஊக்கப்படுத்த பிசிசிஐ இந்த மெகா தொகையை அறிவித்துள்ளது.
இதன் மூலம் 2000, 2008, 2012, 2018, 2022-வைத் தொடர்ந்து 2026-லும் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த வெற்றியைப் பாராட்டி வருகின்றனர்.


