ராஜ்கோட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 14) ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் தொடங்கியது. வதோதராவில் நடந்த முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டாஸ் மற்றும் பிட்ச் நிலவரம்: இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பனிப்பொழிவு (Dew Factor) இரண்டாம் பாதியில் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். அதேநேரம், “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம், பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாகத் தெரிகிறது” என இந்திய கேப்டன் சுப்மன் கில் உற்சாகமாகத் தெரிவித்தார்.
அணிகளில் மாற்றம்:
இந்தியா: ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டதால் அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக வளர்ந்து வரும் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து: அந்த அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெய்டன் லெனக்ஸ் (Jayden Lennox) இன்று தனது அறிமுகப் போட்டியில் விளையாடுகிறார்.
இன்றைய இந்திய அணி (Playing XI): ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.


