அஜர்பைஜான் நாட்டின் நக்கிவன் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது வைக்கப்பட்ட புகாரை, ஈரானிய ஆயுதப்படை இன்று அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்டை நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லைப் பாதுகாப்பை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்.
அஜர்பைஜான் மீது நாங்கள் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் ஈரானால் நடத்தப்பட்டது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி, இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானை ஒரு குற்றவாளியாகச் சித்தரித்து, அஜர்பைஜான் போன்ற நாடுகளைத் தூண்டிவிட இஸ்ரேல் திட்டமிட்டுச் செயல்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அண்டை நாடான அஜர்பைஜானுடன் மோதுவதில் தங்களுக்கு விருப்பமில்லை என்பதையும் ஈரான் ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், அஜர்பைஜான் தரப்பு இந்த விளக்கத்தை ஏற்குமா அல்லது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமா என்பது உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


