மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது அண்டை நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இன்று மதியம், ஈரானிலிருந்து ஏவப்பட்ட தற்கொலை படை ட்ரோன்கள் (Kamikaze Drones) அஜர்பைஜானின் நக்கிவன் (Nakhchivan) தன்னாட்சி குடியரசுப் பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் கட்டிடம் மீது மோதி வெடித்தன.
இந்தத் தாக்குதலில் விமான நிலையக் கட்டிடம் பலத்த சேதமடைந்ததோடு, அங்கு பணியாற்றிய இரண்டு சிவிலியன்கள் படுகாயமடைந்தனர். இதுமட்டுமின்றி, மற்றொரு ட்ரோன் ஷகராபாத் (Shakarabad) கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே விழுந்து வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு அஜர்பைஜான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “சர்வதேச சட்டங்களை மீறி நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலுக்கு ஈரான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். எங்களது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்துப் பதிலடி நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு” என அஜர்பைஜான் அரசு எச்சரித்துள்ளது.
ஈரான் தூதரை நேரில் அழைத்து அஜர்பைஜான் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேலுடன் நெருங்கிய பாதுகாப்பு உறவில் இருக்கும் அஜர்பைஜான் மீது ஈரான் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், தெற்கு காகசஸ் பிராந்தியத்தில் ஒரு புதிய போர் முனையைத் திறக்கும் என அஞ்சப்படுகிறது.


