அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் அரசு இன்று ஒரு அதிரடியான மற்றும் ஆபத்தான எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு விடுத்துள்ளது. “அமெரிக்காவின் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால், ஈரானில் இருந்து ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட சர்வதேசச் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம்” என ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் கடற்படை மற்றும் ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறி வரும் நிலையில், தங்களின் கடைசி ஆயுதமாக ‘எண்ணெய் விநியோகத் தடையை’ ஈரான் கையில் எடுத்துள்ளது.
உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பகுதியைத் தீர்மானிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக முடக்குவோம் என்றும், இதன் மூலம் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. “எங்கள் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும்போது, உலக நாடுகள் எரிசக்திப் பாதுகாப்பைப் பற்றிப் பேச முடியாது” என ஈரான் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை 110 டாலரைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஈரானின் இந்தத் தடை அறிவிப்பு உண்மையானால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொடும் எனப் பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர். டிரம்பின் “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த முடிவை எடுத்துள்ள ஈரான், தனது எண்ணெய் கிணறுகளைத் தாங்களே தீயிட்டு அழிக்கவும் தயங்க மாட்டோம் எனக் கூறியுள்ளது உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் பகுதி இந்த பிராந்தியத்தைச் சார்ந்துள்ளதால், மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.


