பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே பெரும் உள்நடப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. தலைமைப் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கும் எண்ணத்திற்கான காரணங்களை வெளியிட்டு, கட்சிக்குள் நிலவும் பூசல்களை விரிவாக வெளியிட்டுள்ளார் ராமதாஸ். தொடர்ச்சியான வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது எனது வாழ்க்கையிலேயே ஒரு பெரிய தவறு என வருத்தம் தெரிவித்துள்ளார்.
தனது சத்தியத்தையும் மீறி 35 வயதிலேயே அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கியது தான் தற்போதைய நிலைமைக்கு மூல காரணம் என விமர்சித்துள்ளார். அண்மையில் தருமபுரியில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி மேடையில் நாகரிகமற்ற நடத்தையை காட்டியதாகவும், முடிவுகளை எதிர்க்கும் போக்கில் செயல்பட்டதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
முகுந்தன் தமிழ்குமரன் ஆகியோருக்கு பதவி அளித்ததும் அன்புமணியின் விருப்பத்திற்கு எதிராக இருந்தது. அவர் உடனே எதிர் வினை காட்டினார் என்றும் அவர் தெரிவித்தார். அன்புமணியின் தாயாருடன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் ராமதாஸ் விளக்கமாக பகிர்ந்துள்ளார். பொங்கல் விழாவில் தனது தாயார் கேள்வி எழுப்பியதற்கு பதிலாக அன்புமணி பாட்டிலை எரிந்த சம்பவம் நடந்தது என அவர் கூறினார். இது கட்சியின் ஒழுங்குக்கும் மரியாதைக்கும் குந்தகம் ஏற்படுத்துவதாகவும் அவர் சாடினார்.
தனது கட்சிப் பணிகளுக்காக மாவட்டங்களுக்கு செல்லும் முயற்சியை கூட அன்புமணி தடுக்க முயன்றதாக ராமதாஸ் குற்றம்சாட்டினார். மைக் வைத்து பேசக்கூடாது, நிர்வாகிகளை நேரில் சந்திக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்று கூறிய அவர், இது தான் கட்சி வளர்த்தவருக்குக் கிடைக்கும் மரியாதையா? எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கும் முடிவும் எடுக்கப்படும் என்று ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது பாமக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.