தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்திரன். சமீபமாக சமூக வலைதளங்களில் அவர் திருமணம் செய்யவுள்ளதாக பரப்பப்பட்ட தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த வதந்திகளில் குறிப்பாக, சன் நெட்வொர்க் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக அதிகாரியுமான காவ்யா மாறனின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் IPL நிகழ்ச்சிகள் மற்றும் சில பொது விழாக்களில் ஒரே மேடையில் தோன்றிய புகைப்படங்கள், இணையத்தில் வேகமாக பரவி, ‘அனிருத் – காவ்யா’ ஜோடி விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக வதந்திகளை தூண்டும் முக்கியமான கருவியாக மாறின. இதனையடுத்து பல யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்களில், “இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும்” வீடியோக்கள் வெளியானது.
இந்த வதந்திகள் மிகுந்த பரவலுக்குப் பிறகு, அனிருத் தரப்பிலிருந்து விளக்கம் வெளியாகி, “தற்போது திருமணம் குறித்து எந்தத் திட்டமும் இல்லை; என அவரது X பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அனிருத் இசைத் துறையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்” என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அவரது தனிப்பட்ட விஷயங்கள் மீதான தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. காவ்யா மாறன் சார்பிலும், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால், அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “இது வெறும் வதந்தி மட்டுமே. காவ்யா தற்போது தனது தொழில்முயற்சியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். காதல் அல்லது கல்யாணம் குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை” என்றனர்.
இதன் மூலம், அனிருத் மற்றும் காவ்யா மாறன் இடையே பரவிய திருமண வதந்தி உறுதியின்றி பரவிய கற்பனையாக இருப்பது உறுதியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் இவ்வகை தகவல்களை நம்புவதற்குமுன் உண்மைத் தரவுகளை உறுதிப்படுத்துவதைப் பழக்கமாக்க வேண்டும் என்பதே நுட்பமான பாடமாகும்.