பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், வேலை வாய்ப்பையும் விரிவுபடுத்தும் புதிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் சாலை போக்குவரத்து நிறுவனம் (IRT) மூலம், சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட 17 முக்கிய மையங்களில் நடக்கவிருக்கிறது. பெண்களுக்கு பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டும் திறனை வழங்கி, மாநில போக்குவரத்து கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்வதே முக்கிய குறிக்கோள். 45 முதல் 60 நாட்கள் வரை, தியரி மற்றும் நடைமுறை பயிற்சிகள் இலவசமாக நடைபெறும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
கல்வி: குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி (தமிழ் வழி).
உயரம்: 155 செ.மீ.க்கும் மேல்.
எடை: குறைந்தபட்சம் 50 கிலோ.
ஓட்டுநர் உரிமம்: குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முன்பு பெற்ற LMV உரிமம் மற்றும் PSV பேட்ஜ் இருக்க வேண்டும்.
மருத்துவ தகுதி: கண்பார்வை மற்றும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும்.
சென்னை (கும்மிடிப்பூண்டி), திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட 17 இடங்களில் சிறந்த பயிற்சியாளர்களுடன் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி – ஆகஸ்ட் 20, 2025.
விரைந்து விண்ணப்பியுங்கள். ஆன்லைனில் www.irtchennai.in அல்லது www.tnskill.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை தயார் செய்யுங்கள் – ஆதார், LMV உரிமம், 8ஆம் வகுப்பு சான்றிதழ், மருத்துவச் சான்று.ஆஃப்லைன் விண்ணப்பம் வேண்டுமா? அருகிலுள்ள IRT மையத்திற்கோ, மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கோ சென்று விண்ணப்பிக்கலாம். அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்துக்குப் பிறகு, இப்போது பஸ், லாரி ஓட்டுநர் பயிற்சியுடன் பெண்கள் சாலைப் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிக்கத் தயார்.





