மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இன்று (மார்ச் 28, 2026) அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஆயுதத் தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் நேற்று இரவு இஸ்ரேலின் பல நகரங்கள் மீது சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதில் டெல் அவிவ் பகுதியில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “ஈரான் பயங்கரவாத அரசு பொதுமக்களை இலக்காகக் கொண்டு ஏவுகணைகளை வீசுவதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் பலமுறை எச்சரித்தோம். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. இதற்கு அவர்கள் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தயாரிக்கும் மற்றும் இயக்கும் ஈரானின் ஒவ்வொரு தளமும் இனி எங்களின் இலக்காக இருக்கும். எங்களின் தாக்குதல்கள் இனி வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் மற்றும் விரிவுபடுத்தப்படும்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். குறிப்பாக, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தொழிற்சாலைகள் மற்றும் கடற்படை ஏவுகணை உற்பத்தி மையங்களை இஸ்ரேலிய விமானப்படை ஏற்கனவே சிதைத்து வரும் நிலையில், இனி மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கியக் கட்டமைப்பு வசதிகளும் தாக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முயற்சி செய்து வரும் சூழலில், இஸ்ரேலின் இந்த அதிரடி நிலைப்பாடு போரின் போக்கை மாற்றியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலக நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான இந்த நேரடி மோதல் உலகப்போர் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.


