தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த திருநங்கை ஷிவின் பழனிவேல், தன்னுடைய விடாமுயற்சி மற்றும் உறுதியால் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை முறியடித்து, சென்னையின் புகழ்பெற்ற எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் (B.Com CS) படிப்பில் முழு உதவித்தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த கல்லூரியில் சேர்க்கப்பட்ட முதல் திருநங்கை மாணவி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தனது புதிய வாழ்க்கை பாதையில் இந்த சேர்க்கை மிக முக்கியமான சாதனையாக அமைந்துள்ளதாக ஷிவின் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பை முடித்தார். அதன்பின் மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூருக்கு சென்ற ஷிவின், 2023இல் சென்னையில் குடியேறினார். சென்னையில் ‘அம்மா’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஷாக்ஷியை சந்தித்தது ஷிவினின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. திருநங்கை சமூகத்தில் அதிக மதிப்புடன் இருக்கும் ஷாக்ஷியின் ஆதரவு, ஷிவினின் கல்விப்படிப்பை தொடரும் எண்ணத்தைத் தூண்டியது. பெற்றோரை இழந்த ஷிவினுக்கு அவரது உடன்பிறப்புகளிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. அது அவருக்கு மேலும் படிக்க உற்சாகத்தை கொடுத்தது.
பல கல்லூரிகளில் இருந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்த ஷிவின், எத்திராஜ் கல்லூரியின் விண்ணப்ப படிவத்தில் ‘மற்றவை’ என பாலினத் தேர்வை குறிப்பிட்டார். அதை பார்த்த எத்திராஜ் கல்லூரி தலைவரிடமிருந்துஷிவினுக்கு நேரடியாக அழைப்பு வந்தது. பின்னர் ஷிவின் முழு உதவித்தொகையுடன் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இதற்குப் பிறகு, “இந்த தருணம் நம்ப முடியாத மாதிரியானது,” மகிழ்வுடன் பேசினார் ஷிவின். இது குறித்து எத்திராஜ் கல்லூரி தலைவர் மைக் முரளிதரன் “பல கல்லூரிகள் இன்னும் திருநங்கை மாணவர்களை சேர்க்க தயங்குகின்றன. நாங்கள் அந்த நிலையை மாற்றவே இந்த முயற்சி எடுத்தோம். ஷிவின் போல் பலர் கல்வி வாய்ப்புகளை பெற வேண்டும் என்றுதான் இவரை சேர்த்தோம்,” என்றார். இந்த முயற்சி, திருநங்கை சமூகத்தினருக்குள் கல்வி மீது நம்பிக்கையை உருவாக்கும் ஒரு முன்னோடியாக இருக்கப்போகிறது.