தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் எழத் தொடங்கியுள்ளன. சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் கட்சிப் பணிகளை ஆய்வு செய்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், தொகுதிப் பங்கீடு குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“எங்களைப் பொறுத்தவரை இந்தியா (INDIA) கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கான சூழல் மற்றும் வியூகங்கள் வேறானவை” என்று அவர் கூறியிருப்பது, திமுக கூட்டManickam Tagore, DMK Congress Alliance, TN Politiணியில் காங்கிரஸ் தனது பேர வலிமையை அதிகரிக்கப் போகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியை வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாகக் கேட்கும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “காங்கிரஸ் கட்சிக்கு பூத் அளவில் நிர்வாகிகள் இல்லை, களப்பணி வலுவாக இல்லை என்று சொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் வலிமையாக உள்ளது. அதனால்தான் இந்தத் தொகுதியை நாங்கள் முன்னுரிமை கொடுத்துக் கேட்கிறோம்” என்று அவர் கூறினார். பொதுவாகக் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தேர்தல் நேரத்தில் தான் நடக்கும், ஆனால் இப்போதே மாணிக்கம் தாகூர் தொகுதிப் பெயரைச் சொல்லி உரிமை கோருவது திமுக மாவட்டச் செயலாளர்களிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது.
மேலும், ராகுல் காந்தியின் பாதயாத்திரை மற்றும் கட்சியின் தற்போதைய எழுச்சி, காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு உரிய அங்கீகாரமும், கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளும் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் என்பதை மாணிக்கம் தாகூர் தனது பேச்சின் மூலம் சூசகமாக உணர்த்தியுள்ளார். 2026 தேர்தலில் தொகுதிகளைப் பங்கிடுவதில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஒரு பெரிய ‘மல்யுத்தமே’ நடக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.


