திருமண பந்தத்தில் அப்பாவிகளை மாட்ட வைத்து பணம், நகையை பறிக்கும் மோசடி கும்பல்களில் சில பெண்களும் இருக்கிறார்கள். அந்த வகையில், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா (30) என்ற பெண் பலரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி வந்த மோசடி நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் வசிக்கும் ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் சமீபத்தில் திருமணம் செய்வதற்காக ஆன்லைன் மணமகள் தேடும் தளங்களில் பதிவு செய்திருந்தார். அதன்பின், ரேஷ்மா என்ற பெண்ணிடம் இருந்து தொடர்பு வந்ததும் அவர் உற்சாகமாக திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினார்.
விசாரணையில் ரேஷ்மா கடந்த சில ஆண்டுகளாகவே இதே பாணியில் பலரை ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. சுமார் 45 நாள்களுக்கு ஒருவரை திருமணம் செய்து, சில நாள்களுக்குப் பிறகு அவரிடம் பணம், நகை எடுத்துக் கொண்டு கடைசியில் தப்பி ஓடிவிடும் ‘ஸ்ட்ராடஜி’யை அவள் பயன்படுத்தி வந்துள்ளதும் தெரியவந்தது. கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் ஆறு திருமணங்கள் நடத்தியதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் இடைவெளி குறைவாகவே இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஏமாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் தனியாக வாழும் ஆண்கள் தான்.
திருமண நிகழ்ச்சிக்கு முன்னதாகவே பஞ்சாயத்து உறுப்பினர் சந்தேகமடைந்து, தனது நண்பருடன் ரேஷ்மாவின் உடைகள் மற்றும் கைப்பேசியை சோதனை செய்தபோது, ஏற்கனவே பல திருமண ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற ஆவணங்கள் கிடைத்தன. உடனே அவர் போலீசாருக்கு புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரம் போலீசார் ரேஷ்மாவை அழகு நிலையத்தில் இருந்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையில், இளம் வயதில் முதல் திருமணம் செய்து பிரிந்ததும், அதன்பின் தொடர்ந்து பலரை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்ததும் தெரியவந்தது.
விவசாயிகள், தனியார் ஊழியர்கள், வர்த்தகர்கள் என ஏராளமான ஆண்களை ஏமாற்றி வந்த ரேஷ்மாவுக்கு, 2 வயது பெண் குழந்தை இருப்பதாகவும், அதை உறவினர்களிடம் விட்டுவிட்டு திருந்தாத வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. முப்பதுக்கு மேற்பட்ட பேரை ஏமாற்றிய ரேஷ்மா, திருவனந்தபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் மணமகள் தேடும் நபர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.