சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்த ஒரு வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே பெரும் கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்தக் காட்சிகளில், ஒரு தாய் தனது சிறுமியை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, ரீல்ஸ் வீடியோ எடுப்பதில் ஈடுபட்டிருக்கும் போது, கடலின் பேரலைகள் குழந்தையை இழுத்துச் சென்றுவிட்டன. அந்தச் சிறுமி உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தும் தகவல்களும் இதற்குப் பின் வெளிவந்தன. வீடியோவில் சிறுமி கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, தாயின் கவனம் வீடியோ எடுத்தலிலும், போஸ்களிலும் மட்டுமே இருந்தது. குழந்தையின் அருகே பெரிய அலை வந்தபோதும், தாயின் கவனம் திரும்பவில்லை. கடலின் அதிரடியான அலைகள் அந்தக் குழந்தையை திடீரென இழுத்துச் சென்றதும், அருகிலிருந்தவர்கள் அலறியோடியும், தாயும் பீதியில் முழங்கியதும் வீடியோவில் காணப்படுகிறது. அந்தக் குழந்தையை மீட்க அருகில் இருந்தவர்கள் முயன்றும், அந்த நேரத்தில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததால், அவர்களது முயற்சி பயனளிக்கவில்லை. சில நிமிடங்களில் அந்தச் சிறுமி கடலில் காணாமல் போனாள். இந்த வீடியோவை பகிர்ந்த மருத்துவர் ஷீத்தல் யாதவ், “நீங்கள் எடுத்தது ரீல் அல்ல, ஒரு மரண காட்சி!” என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பார்த்தவர்கள், “ஒரு தாய் இவ்வளவு கவனக்குறைவாக இருக்கலாமா?”, “மகளின் உயிரைக் கையில் வைத்தும், லைக்குகளுக்காக அதைப் சூதாடியிருப்பது எத்தனை பயங்கரமானது!” என கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பலரும், “அந்த தாயுக்கு குழந்தையின் உயிரை பறித்ததற்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்துகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடைய பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.