தெலங்கானா மாநிலம் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜேஷ்வர் (32) என்பவர், தனியார் நில அளவையராக பணியாற்றி வந்தார். கடந்த மே 18ஆம் தேதி, ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணம் வெறும் ஒரு மாதத்திலேயே பயங்கர முடிவுக்கு வழிவகுத்தது. திருமணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பாக ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனார். பின்னர் காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்பட்டு வந்தது. மூன்று நாட்களில் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பினார்.
தேஜேஷ்வரிடம் மன்னிப்புக் கேட்டு, பெற்றோரால் வரதட்சணை வழங்க முடியாத மன அழுத்தத்தில் தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்ததாகவும் கூறினார். மே 18 அன்று திருமணம் நடைபெற்றபின், இரண்டே நாளில் முதல் முறையாக தம்பதிக்குள் பிரச்சனை உருவானது. ஐஸ்வர்யா அடிக்கடி செல்பேசியில் ஒருவருடன் பேசுவதை தேஜேஷ்வர் சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறுகள் ஏற்பட்டன. ஜூன் 17ஆம் தேதி, தேஜேஷ்வர் திடீரென காணாமல் போனார். அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தனர். ஜூன் 19ஆம் தேதி, பன்யம் அருகே உள்ள சுகலிமெட்டா பகுதியில் தேஜேஷ்வரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஐஸ்வர்யா மற்றும் அவரது தாயார் சுஜாதா மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சுஜாதா கர்நூல் நகரில் உள்ள ஒரு வங்கியில் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார் என்பதும், அதே வங்கியில் பணியாற்றும் ஒரு ஊழியருடன் தகாத உறவு வைத்திருந்ததும் தெரியவந்தது.
பின்னர், அந்த வங்கி ஊழியருடன் ஐஸ்வர்யாவும் தொடர்பில் இருந்தார். திருமணத்திற்குப் பிறகு, தேஜேஷ்வர் இதை கண்டித்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். வங்கி ஊழியர், கூலிப்படையினரை ஏற்பாடு செய்து, தேஜேஷ்வரை கொலை செய்ய பணம் கொடுத்தார். ஜூன் 17ஆம் தேதி, நிலம் அளவீடு செய்ய வேண்டும் என கூறி கூலிப்படையினர் தேஜேஷ்வரை காரில் அழைத்துச் சென்றனர். புறநகர் பகுதியில் காரை நிறுத்தி, அவரை தாக்கிய பின், கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அவரது சடலம் பின்னர் சுகலிமெட்டா பகுதியில் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். திருமணமான ஒரே மாதத்தில், ஐஸ்வர்யா மற்றும் வங்கி ஊழியர் இடையே 2000 முறை போனில் உரையாடல் நடந்தது என்பதும் போலீசாரின் விசாரணையில் வெளியாகியுள்ளது. இந்தக் கொலைக்குழுவில் உடந்தையாக இருந்த வங்கி ஊழியர் மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.