புதுமையான கல்வி முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில், ‘தேசிய இன்னோவேஷன் சிக் ஷா ரத்னா விருது 2024-25’ இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த பெருமைமிகு விருதிற்குத் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து நான்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த விருதைப் பெற உள்ளனர் என்பது பெருமிதத்தை அளிக்கிறது.
விருதுப் பெற்ற ஆசிரியர்கள் யார்?
1.எஸ். பிருந்தா – கடலூர் மாவட்டம் மேல்ப்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி. ஆங்கிலப் பாடத்திற்கும் உடற்பயிற்சிக்கும் உதவியாளராக செயல்படுகிறார்.
3 முதல் 10ம் வகுப்புக்கான 3,000 கல்வி வீடியோக்களை யூடியூபில் உருவாக்கியுள்ளார். கல்வி வானொலியில் பங்கேற்றுள்ளார்; 2023ல் தேசிய NCERT விருதும் பெற்றவர்.
2.ஏ. சுதா – பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. விலங்கியல் ஆசிரியர். புதிய உயிரியல் பாடநூல் உருவாக்கத்தில் பங்களித்தவர். கொரோனா காலத்தில் தொலைதூர மாணவர்களை நேரில் சென்று கல்விக்குத் திரும்பச் செய்தவர்.
3.கே. குமரவேலு – திருப்பூர் கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி.
கணித ஆசிரியர். 10 மாநில விருதுகள், 5 சர்வதேச டிஜிட்டல் பேட்ஜுகள் பெற்றவர். GeoGebra தொழில்நுட்பத்தை பாடத்துடன் இணைத்து QR குறியீடுகள் மூலம் கற்றல் மேம்பாட்டில் பங்கு பெற்றவர்.
4.எஸ்.ஆர். பிந்துலேகா – கன்னியாகுமரி கோட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி. இயற்பியல் ஆசிரியர்.“மணற்கேணி” செயலி மற்றும் இணையதளத்தின் மூலம் 100+ கல்வி வீடியோக்களை உருவாக்கியவர். டிஜிட்டல் உள்ளடக்கம் உருவாக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
விருதின் முக்கியத்துவம் :
இந்த விருது வெறும் பாராட்டாக மட்டும் அல்ல; இந்த ஆசிரியர்களின் கல்வி புதுமைகள் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. “இது அவர்கள் பணிக்கு ஒரு முக்கியமான ஊக்கமாக உள்ளது. மாணவர்களுடன் நேரடியாக எளிமையான முறையில் பாடங்களை பகிர்ந்து, அவர்களைச் செம்மைப்படுத்த இதைச் செயல்படுத்துவேன்” எனக் கூறுகிறார் ஆசிரியர் பிருந்தா.





