மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரவிய தகவலால் கடந்த சில தினங்களாகப் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் குவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளன. “நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை. பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்; அதனை மற்றவர்களுக்குப் பரப்ப வேண்டாம்” என எண்ணெய் நிறுவனங்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
மேலும், எரிபொருள் விநியோகத்தில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள நிறுவனங்கள், “பெட்ரோல் டீலர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் எரிபொருள் அளவு எக்காரணம் கொண்டும் குறைக்கப்படவில்லை. அனைத்துப் பெட்ரோல் பங்க்குகளுக்கும் தேவையான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” என்று உறுதி அளித்துள்ளன.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், பெட்ரோலுக்கும் அதே நிலை ஏற்படும் என்ற பயத்தில் மக்கள் கேன்களில் எரிபொருளைச் சேமிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் இந்தத் திடீர் அறிவிப்பு, கடந்த சில மணி நேரங்களாக நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் இருப்பு போதிய அளவு உள்ளதால், வாகன ஓட்டிகள் பங்க்குகளில் வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், விநியோகம் எப்போதும் போலச் சீராக இருக்கும் என்றும் அரசு தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


