தமிழ் திரையுலகில் எப்போதுமே தனது நக்கல் கலந்த பேச்சால் கவனம் ஈர்ப்பவர் நடிகர் பார்த்திபன். ஆனால், இம்முறை அவர் பேசிய ஒரு கருத்து விவாதத்திற்கு உள்ளாகி, நடிகை த்ரிஷாவிடமிருந்து கடுமையான பதிலடியைப் பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த குந்தவையை கொஞ்ச நாள் வீட்டுக்குள்ளேயே குந்தவைப்பது (உட்கார வைப்பது) நல்லது.
வெளியே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால் நிறைய பிரச்சினைகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளலாம்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பார்த்திபனின் இந்த இரட்டை அர்த்த அல்லது நக்கல் பேச்சு த்ரிஷா தரப்பை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இதற்குத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகத் தெளிவாகப் பதிலடி கொடுத்துள்ளார் த்ரிஷா. “மைக்கில் பேசுவதால் ஒரு கருத்து நகைச்சுவையாக மாறிவிடாது. முட்டாள்தனத்தை இன்னும் உரக்கச் சொல்லவே மைக் உதவும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பார்த்திபனின் முதிர்ச்சியற்ற பேச்சைத் த்ரிஷா நேரடியாக ‘முட்டாள்தனம்’ என்று சாடியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து, பார்த்திபன் தனது தவறை உணர்ந்து ஒரு விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்று பதிவிட்டுத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு நகைச்சுவை முயற்சி எப்படித் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ஒரு மோதலாக மாறியது என்பதுதான் தற்போது சினிமா ரசிகர்களிடையே பேசுபொருளாக உள்ளது.


