நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓர் ஆம்புலன்ஸ் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அவசர சேவைக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸிலேயே பாதுகாப்பு முறை தவறியதால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. குன்னூர் ஓட்டுப்பட்டறையிலிருந்து உடல்நிலை மோசமாக இருந்த நபர் ஒருவர் குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அந்த ஆம்புலன்ஸ் லெவல் கிராசிங் பகுதியில் சென்றபோது வேகத்தடையை கடந்து இறங்கிய தருணத்தில், அதன் பின்புறக் கதவு திறந்து விட்டது.
பாதுகாப்பு முறைகள் சரியாக இல்லாததால், ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த நோயாளி நேரடியாக சாலையிலே விழுந்தார். அதனைப் பார்த்த பொதுமக்கள் மிகவும் பதற்றமடைந்து உடனடியாக பின்னாலிருந்து வந்த வாகனங்களை நிறுத்தி, வேகமாக பரிசோதனை செய்து நோயாளிக்கு அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுத்தனர். இதனிடையே ஓர் நபர் ஆம்புலன்ஸை துரிதமாக தடுத்து நிறுத்தி, விழுந்த நோயாளியை மீண்டும் ஸ்ட்ரெச்சரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன. மருத்துவ அவசர சேவையை நம்பி பயணம் செய்பவர்கள் கூட, இப்படி வழியில் விபத்துக்குள்ளாவதா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆம்புலன்ஸ்களை முறையாக பராமரிக்கவும், அவற்றின் கதவுகள் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், என குன்னூரில் பலர் வலியுறுத்துகின்றனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவசர சேவைகள் பற்றிய பாதுகாப்பு விதிகள் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது.