தமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள்!! திருச்சியில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!!

pm-modi-launches-5-new-train-services-tamil-nadu-trichy-march-2026

தமிழகத்தின் ரயில்வே கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 11, 2026) திருச்சிக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்டமான மத்திய அரசு விழாவில், தமிழகத்தைப் பல்வேறு மாநிலங்களுடன் இணைக்கும் 5 புதிய ரயில் சேவைகளை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார்.

இதில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நெல்லை – மங்களூர் எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம் – மங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் அடங்கும். இது தென் தமிழகத்திலிருந்து கேரளா வழியாக கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் பக்தர்களுக்கும், வியாபாரிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

மேலும், குறைந்த கட்டணத்தில் சொகுசுப் பயணத்தை வழங்கும் நாகர்கோவில் – சாரளப்பள்ளி (ஹைதராபாத்) அம்ரித் பாரத் மற்றும் கோவை – தன்பாத் அம்ரித் பாரத் ஆகிய அதிநவீன ரயில்களும் நாளை முதல் தங்களது சேவையைத் தொடங்குகின்றன. டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மயிலாடுதுறை – காரைக்குடி இடையேயான ரயில் சேவையும் இந்த விழாவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்த 5 புதிய ரயில்கள் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் மேற்கு மாவட்டங்கள் அண்டை மாநிலங்களுடன் நேரடியாக இணைக்கப்படுகின்றன. இது மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவைப் பெருமளவு மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரயில்வே ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த அறிவிப்பைக் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram